Monday, September 18, 2017

அதிருத்ர மஹாயாகம்

                                      
                   
டொராண்டோ நகரில் 2015-ல் நடந்த  அதிருத்ர மஹாயாக விழாவில் உயர்திரு ஸ்ரீ பாலக்ருஷ்ண சாஸ்த்ரிகளுக்கு அளித்த   நன்றியுரை

                        திருச்சிற்றம்பலம்

உலகெலாம் படைத்தளித்து ஊழிதனில் அழித்துயிர்கள்
மலமெலாம் மாயு(ம்)வணம் மறைத்தருளும் சிவபெருமான்
தலமெலாம் எழுந்தருளும் தாயொடுதந் தையுமானோன்
தொலைவெலாம் கடந்திந்த தொராந்தோ நகர்வாழும்

நாமுமவன் மைந்தரென நமக்கருள உளங்கொண்டு
மாமறைகள் ஓதுவதில் மன்னரென ஈங்குள்ள
பாமரரும் போற்றுகின்ற பாலகிருஷ்ண ஸாஸ்த்ரியெனும்
நாமமுடை விற்பனரை நமக்களித்துத் தான்மகிழ்ந்தான்!

ஒருமுறைதன் பேர்மொழிந்தால் உவகையுறும் பெருமானை
அருமறைகள் பலப்பலவாய் அழைத்துள்ள துதிகளுக்குள்
அருத்தங்கள் பலசெறிந்த அஞ்செழுத்தை உள்ளடக்கும்
உருத்திரமும் சமகமுமே உயர்ந்ததென உலகறியும்

அத்தகைய மந்திரத்தை அதிருத்ர ஹோமமெனும்
உத்தமத்தில் உத்தமமாய் உயர்ந்ததொரு வேள்வியினை
எத்தனையோ சன்மத்தில் இயற்றியநம் புண்ணியத்தால்
இத்தலத்தில் நடத்துதற்கு இவர்மனத்துள் சிவன்புகுந்தான்

சென்றபத்துத் தினங்களிங்குத் தேவர்கள் அணிவகுத்தார்!
நன்றுநன்று எனமுனிவர் நம்மிடையே நடமிட்டார்!
குன்றிலுறை குமரனொடு கணபதியும் தோழருடன்
என்றுமிலா வணம்நிகழும் இவ்வேள்வி காணவந்தார்!

இவ்வாறு சிறப்பாக ஏழுமலைப் பெருமாள்முன்
செவ்வனே நிகழ்ந்திட்ட சீரியஇவ் விழாமுடிவில்
ஒவ்வொருவ ரும்உரைப்போம் உளமார்ந்த நன்றியினைப்
பவ்வியமாய்ப் பாலக்ருஷ்ண சாஸ்த்ரியெனும் பெருமகற்கே!

                                    .. வே.ச. அனந்தநாராயணன்
                                    .. ஜூலை 5, 2015

No comments: