Friday, June 30, 2017

கானடா-150

இன்று (1-7-2017) கனடா நாடு தனது நூற்றைம்பதாம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறது:
   
<> ஒன்றரை நூற்றாண்டு <>




காற்றும் நிலமும் யாவருக்கும்
.. கடவுள் தந்த உடைமையெனச்
சாற்றி வாழ்ந்த முன்னோரின்*
.. சரிதம் தன்னை இந்நாளும்
போற்றித் தன்னால் இயன்றவரை
.. போக்கில் லாத மாந்தருக்கும்
ஏற்றம் தந்து வாழவைக்கும்**
.. இந்த நாட்டிற் கிணையேது?

உலகில் மக்கள் துயருறுங்கால்
.. உடனே உதவித் தொகையனுப்பிக்
கலகம் விளையும் இடங்களிலே
.. கடிதே உதவிப் படையனுப்பிப்
பலவாய் மனித நேயத்தின்
.. பாங்கைச் செயலில் காட்டுவதில்
தலைமை தாங்கும் இந்நாட்டின்
.. தகைமை மாணப் பெரிதாமே.

சனநா யகத்தின் நோக்கினின்று
.. சற்றும் பிறழாக் கனடாவில்
மனம்போல் மக்கள் யாவருமே
.. வாழும் அழகே அழகாமே
இனவேற் றுமைக்கிங்(கு) எள்ளளவும்
.. இடமே இல்லை, தலைசாய்த்(து)இத்
தினத்தில் இந்தத் திருநாட்டை
.. தெய்வம் காக்க வேண்டுவமே.

*முன்னோர் – கானடா நாட்டின் பூர்விகக் குடியினாகிய (சிவப்புஇந்தியர்கள்இங்கு அவர்களை Indians என்று குறிப்பார்கள்
.** 2016-ல் மட்டும் கனடா 46,700 வெளிநாட்டு அகதிகளுக்கு இடங்கொடுத்து அவர்கள் நன்கு வாழ வழி வகுத்துள்ளது.

அனந்த்
1-7-2017    

No comments: