<> என்குரு நீ <>
வியனுல கனைத்தும் அமுதென நுகர வேட்கையைக் கொண்டவன் நீ
பயனுற வாழ்ந்து பறவையில் விலங்கில் பரமனைப் பார்த்தவன்நீ
கயமையைக் களையக் கைகொடுத் துதவக் காளியை நாடினைநீ
பயமெனும் சொல்லைப் பயப்பட வைத்த பாரதி! என்குருநீ
நிலவினில் காற்றில் நிலவிடும் அமுத நீரினில் நீந்தினைநீ
பலவகை வண்ணப் பாடலில் புதுமை புகுத்திய
பாவலன்நீ
அலகிட இயலாக் களிப்புடன் உலகை அனுபவித் துணர்ந்தவன்நீ
உலகினர் துயரை உளத்தினில் தாங்கி ஒற்றுமை வளர்த்தவன்நீ
சொல்லெலாம் உன்றன் கவிதையில் தோன்றத் தவம்பல செய்தனவே
புல்லுமுன் நிழலில் புத்துயிர் பெற்றுப் புன்னகை புரிந்ததுவே
கல்லனை நெஞ்(சு)உன் கவிதையின் கனலில் காய்ந்தபின் கனிந்ததுவே
வல்லவன் உன்கவித் திறனிலோர் திவலை வாய்த்திட எனக்கருள்வாய்!
.. அனந்த் 11-12-2016
No comments:
Post a Comment