Friday, November 4, 2016

இல்லா வாழ்க்கை

முன்குறிப்பு: தானோ பிறரோ தேர்ந்தெடுத்த துணையோடு இல்லற வாழ்க்கை நடத்துவோரின் பெருமையை வள்ளுவர் பெருமான் அறத்துப் பாலில், இல்லறவியல் என்னும் தலைப்பில், இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் (--அதிகாரம் யாருக்கு என்று அன்னார் குறித்திலர்-), அழகுபடப் பத்துக் குறட்பாக்களில் கூறியுள்ளார். அந்தப் பாக்களை ஒட்டி, எமக்குத் தெரிந்த இல்வாழ்க்கைச் சிறப்பை யாம் எடுத்துரைக்க விழைந்தனம். அதன் விளைவாக எழுந்த ்குறட்பாக்களை உங்களோடு பகிர்ந்து மகிழவும் அவாக் கொண்டனம். கீழே காணும் குறட்பாக்கள் வள்ளுவனார் தந்த அதே வரிசையில் (-பத்தாவது பாட்டைத் தவிர-), அவற்றின் சொல்லழகும் சுவையும் குன்றாவண்ணம் அமைக்கப்பட்டவை, (என யாம் நம்புகின்றனம்). ஐயமுறுவோர் திருக்குறளைக் கையிலேந்தி ஒப்பிடுவாராக.


        <>   இல்லா வாழ்க்கை   <> 

இல்வாழ்வான் என்பான் மணம்புரியா நண்பர்கள்
எல்லோர்க்கும் சோறளித்தல் ஏற்பு (1)

துறந்தாரும் தூரத்து உறவான பேரும்
கறந்திடுவார் இல்வாழ்வான் காசு (2)

தன்புலனில் தாரத் துடன்பகைத்த நண்பனுக்கு
உன்புலமே வீடென் றுணர் (3)

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
அழியாமற் காத்தல் அரிது (4)

துன்பும் துயரும் உடைத்தாய இல்வாழ்க்கை
முன்பிருந்த ஜாலிக்(கு) எதிர் (5)

கடனெனக் காண்பதே இல்வாழ்க்கை அஃதை
உடன்தீர்க்க இல்லை வழி (6)

வறுத்தாட்டி இல்வாழ்க்கை வாட்டிடின் வாயில்
புறத்தேபோய்க் கூவென் றழு (7)

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்வோன் களிப்பிற்கு
அயலாகி நிற்கும் அசடு (8)

ஆற்றொழுக்கு நாசிக் குழவிசேர் இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து (9)
(நோன்மை = தவம், பெருமை, பொறுமை, வலி; இங்கு இறுதிப் பொருளில் பயிலும்!)

'கடி'ஜோக்குக் கேற்றதோர் கேலிப் பொருளாய்
அடிபடும்இல் வாழ்வான் தலை (10)

 .. அனந்த் 
(’’ஹப் மாகசீன்’, 2009: )

****** 

No comments: