Wednesday, November 30, 2016

வானில் திரியும்....

                                                   <> வானில் திரியும்.... <>

சன்னல் வழியே நோக்கிய போது அழகாகப் பறந்து சென்ற கனேடிய வாத்துகள்
(Canada geese) என்னைக் கணினித் திரைக்குத் துரத்தின. அதன் விளைவு...



     வானில் திரியும் பறவைகாள் - உங்கள்
     வாழ்க்கையை எண்ணி வருந்துகிறேன்!

     தீனியை ஒன்றே தினந்தினமும் - நீர்
     தேடி அலைந்துதிண் டாடுகின்றீர்!

     மானிட ராகிய எங்களைப்போல் - இன்றி
     வீணே கழிக்கிறீர் உம்பொழுதை

     ஏனிந்தத் தீங்கினை ஈசனுமக் -கென்று(ம்)
     இப்புவி தன்னில் இழைத்திட்டான்?

     மானிட ரெங்கள் குழந்தையது -வந்த
     நாள்முதல் நாங்கள் அதனிடத்தில்

     தானினி வாழ்ந்திடத் தேவைபலப் - பல
     தாமுண் டெனமிகத் தாகமுடன்

     வானினும் நீண்டதோர் பட்டியலை -அது
     வாயினாற் பேசுமுன் தந்திடுவோம்

     தேனினும் மேலாங் குரலெடுத்து - அது
     தா,தா தையெனச் சொல்லுமுன்னே

     மேனிலப் பள்ளிக்(கு) அதையனுப்பி -அங்கு
     வேகமாய்க் கல்வி விழுங்கவைப்போம்

     மூனென வெண்மதி காட்டிதினம் - அது
     முற்றிலும் தமிழை மறக்கவைப்போம்

     நானினி யாவரில் மேலெனவே - அதன்
     நெஞ்சினில் எண்ண விதைவிதைப்போம்

     நானில மீதினில் மென்மேலே - பணம்
     நாலெண் விதத்தினில் சேகரிக்கக்

     கூனியுந் தோற்கக் குறுக்குவழி - பல
     கொடுத்தது கூவக் குதுகலிப்போம்

     ஏனினி உம்முடன் வாதாடி - நான்
     என்பொழு திங்ஙனம் வீண்செய்வேன்

     மேனி அழிந்திடு முன்னர்நீர் - எம்     வாழ்முறை பற்றி வளமுறுவீர்


     .. அனந்த் 30-11-2016 (’திண்ணை’ மின்னிதழில் வெளியானது)

No comments: