Thursday, October 6, 2016

கானாத் தாலாட்டு

கானாப் பாட்டு என்பது சென்னை போன்ற நகரங்களில்நாட்டுவழக்காகப் பாடும்  ஒருவகைச் சந்தம் கொண்ட பா இனம்.  அவ்வகைப் பாடலொன்றைக் கீழே காணலாம்


<>0<>0<>0<>0<>0<>0<>0<>
கானாத் தாலாட்டு
<>0<>0<>0<>0<>0<>0<>0<>

தாலேலோ! செல்லையா
தூக்கம்இன்னும் வல்லியா
தாயிவந்து பாடு றேம்பார் தாலாட்டு - நீயி
தயவுசெஞ்சு நிறுத்திப் போடு வாலாட்டு!

நாயிவரும் குருவிவரும்
நாலுயானை நடந்துவரும்
கதைகதையாச் சொல்லப் போறேன் கேப்பியா? - இல்லை
கண்ணைமூட மறந்து என்னெப் பாப்பியா?

முன்னெமுன்னே நடந்ததயும்
முடிஞ்சுபோயிக் கடந்ததயும்
சொல்லப் போறேன் சும்மா இருக்கப் போறியா? - இல்லை
தூக்கச் சொல்லி அடம் பி டிக்கப் போறியா?

பத்துமாசம் சொமந்தபின்னே
பட்டுப்போல பொறந்தஉன்னெ
அப்பன் காரன் தூங்கப் பண்ணத் தேவலே- எனக்கு
அந்த நாளு உடம்பு வலி போவலே!

தூளியிலே முத்தெக் கட்டி
தொட்டிலிலே வைரங் கட்டி
ஊருக்கெல்லாம் ராசா நீன்னு சொல்லுவேன் - அதை
ஒருபயலும் எதுத்துச் சொன்னாக் கொல்லுவேன்!

வாசமொழுகிக் கோலம்போட்டு
வக்கணையா வெளக்கு வைக்க
நாளை எனக்கு வந்திடுவா மருமவ - அவ
நடைஅளகைப் பாத்து நீயும் திரியுவே!

வயசுகாலம் வருகயிலே
வைத்தியத்துக்கு அலகயிலே
அம்மா பாடின பாட்டைக் கொஞ்சம் நெனச்சுக்கோ! - அவ
அம்பைப் பாத்துக் கையை நல்லாப் புடிச்சுக்கோ!

பாடிக்கிட்டே நானும் போக
பத்துமணியும் ஆயிப் போக
குஞ்சுக்கண்ணெ நீயும் கொஞ்சம் மூடணும் - உன்
குறும்பையெல்லாம் கட்டி வச்சுப் போடணும்!

ஒண்ணேஒண்ணு கண்ணேகண்ணு
ஒனக்கும் எனக்கும் ஒரே மண்ணு!
ஏனுஎன்னெ அப்படிநீ பாக்குறே? - என்னெ
எடுத்து எங்கோ மானத்திலே தூக்குறே!

தாலேலோ செல்லையா
தூக்கம் இன்னும் வல்லையா?
தாயி வந்து பாடுறேம்பார் தாலாட்டு - நீயி
தயவுசெஞ்சு நிறுத்திப்போடு வாலாட்டு!

..... அனந்த்  (அமுதசுரபி’’ தீபாவளி மலர், 2004)
ஒலிப்பதிவுhttp://raretfm.mayyam.com/ananth/thalelo.mp3


No comments: