Friday, October 21, 2016

இணையக் காவடிச் சிந்து <>

<> இணையக் காவடிச் சிந்து <>

எங்களிணை யத்திற்கிலை ஈடு-அது
எம்மனைய னோர்வதியும் வீடு - உளம்
இன்புறஇ னித்திடும்தேன் கூடு

வந்து கூடு(ம்)
அன்பர் நாடும் - அனை
வர்க்கும்பொது வென்றுளபண் பாடு  (1)


இந்தியரும் இங்கிலந்துள் ளோரும் - வேறு
எங்குமுள நாடுபுகுந் தோரும் - ஒரு
சாதியென உவகையுடன் சாரும்

இணையம் பாரும்!
இதற்கு நேரும் - எங்கும்
இல்லைஇ துணர்ந்துபகை தீரும்!  (2)


ஆயிரம்பல் லாயிரமாய்ச் சேர்ந்து - நாம்
அங்குமிங்கும் சேதிகளைத் தேர்ந்து - வெகு
ஆழமுடன் அலசிடுவோம் கூர்ந்து

இணையம் சார்ந்து
எதையும் ஓர்ந்து - செயும்
எவருமிங்கு விழுவதில்லை சோர்ந்து! (3)


கவிதையொடு கட்டுரைச மைப்போம் - பிறர்
காணமன ஓவியம்முன் வைப்போம் -தமிழ்க்
காதல்தரு கனிகளைச்சு வைப்போம்

இன்பம் துய்ப்போம்
துன்பம் பொய்ப்போம் - இந்த
இணையம்வழி எவரையுமி ணைப்போம் (4)

கவிதையறி வென்பதெனக் கில்லை - என்ற
கவலைமுன்பு கொண்டடைந்த தொல்லை - இனிக்
கடுகளவு மென்மனத்தில் இல்லை

இணைய வில்லை
எடுத்து ஒல்லை - இன்றி
இனித்தொடுப்பேன் இனியதமிழ்ச் சொல்லை (5)

...அனந்த் 


No comments: