Wednesday, October 12, 2016

"குப்பைத் தினம்"

          "குப்பைத் தினம்"*

 

      
குப்பைக்கோர் நாளின்று பாரீர்! - சேர்ந்து 
கூடிஎல் லோருமாய்க் கொட்டுவோம் வாரீர்!   (குப்பைக்கோர்..)

வாரம் ஒரேஒரு நாளில் - வண்டி

வருமென் றறிந்துநாம் தூக்குவோம் தோளில்

சேரும்நம் குப்பைக் குவியல் - தரம்

தேர்ந்து பிரிப்போம் குறித்த வகையில்     (குப்பைக்கோர்..) 

நீல நிறத்தொரு பெட்டி - அதை

நிறைத்திடும் காகிதம் கண்ணாடிப் புட்டி

மேலும்உண் டோர்பச்சைக் கூடை - அதில்

வீசிடும் உண்டபண் டங்களின் வாடை!         (குப்பைக்கோர்..)


புல்லுடன் பூண்டெல்லாம் வெட்டி - பல

பைகளில் யாவையும் நன்றாகக் கொட்டி 
எல்லாமாய் வாசலில் சேர்ப்போம் - அதை

எடுத்திடும் வண்டி வரக்காத் திருப்போம்   (குப்பைக்கோர்..)


பூதக ணங்களைப் போன்று - பல

பேருந்து வண்டிகள் வீதியில் தோன்றும்

யாதொரு பாக்கியம் செய்தோம் - என்று

யாவரும் உள்ளத்தில் ஆனந்தம் எய்வோம்      (குப்பைக்கோர்..) 

ஆனை துதிக்கையால் தூக்கி - வாயில்

ஆகாரம் போடும் விதந்தன்னை நோக்கித்

தான்முன்னம் ஆச்சர்யம் கொண்டோம் - இந்தச்

சாதனங் கள்அதை விஞ்சுதல் கண்டோம்.        (குப்பைக்கோர்..)


கண்ணுக்கோர் நோயெனத் தோன்றும் - குப்பை 
கசங்கி நொறுங்கும் ஒலிஇசை போன்று

பண்பல சேர்த்து முழங்கும் - கேட்டுப்

பல்லோரின் வாய்களும் வாழ்த்தை வழங்கும்!  (குப்பைக்கோர்..)


ஊர்சேர்க்கும் குப்பையைக் கொட்ட - ஊரின்

ஓரத்தில் உண்டொரு மாபெரும் பொட்டல்

பார்சேர்க்கும் பாவமாம் குப்பை - கொட்டப்

பரமன்ஏன் தாரான்ஓர் பாழும்ப ரப்பை?       (குப்பைக்கோர்..)


(* ”குப்பைத் தினம்” - garbage collection day.)
.. அனந்த் (’திண்னை மின்னிதழில் 2002-ல் வெளியானது)


No comments: